தமிழகம்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்: நோயாளிகள் கடும் அவதி

செய்திப்பிரிவு

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டுமருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் 104 பேர் கரோனா வார்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் பயிற்சிமருத்துவர்களாக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், கடந்த 3 மாதங்களாக இவர்களுக்கான சம்பளத்துடன் ஊக்கத் தொகை 50 சதவீதம் என்ற அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரமும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நிலுவையில் உள்ள 3 மாத சம்பளம் மற்றும் ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பயிற்சி மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு மாத சம்பளம் உடனடியாக வழங்கப்படும் என்றும், 2 மாத தொகையை பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பயிற்சி மருத்துவர்கள் 3 மாதம் நிலுவைத் தொகையை வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் பல வார்டுகளில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

SCROLL FOR NEXT