பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

ஞாயிறு முழு ஊரடங்கு; வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்: தமிழக அரசு அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவு விநியோகிக்க உணவகங்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடந்த 5ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு உணவு விநியோகிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் நாளை (9-1-2022) அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்'' என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT