சென்னை: இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை சிறையில் இருந்துதமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு டிச.19, 20-ம்தேதிகளில் இருந்து இலங்கை சிறையில் வாடும் 56 மீனவரை விடுவித்து பாதுகாப்பாக அழைத்துவர முயற்சி எடுக்க வேண்டும்.
மீனவர்களுக்கு சொந்தமான, அவர்களது வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத 75 படகுகளையும் மீட்க வேண்டும். பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு இலங்கை அரசுடன் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.