விருதுநகர்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் கைதான கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலர் உட்பட 4 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் இரு வழக்குகள் பதிவுசெய்து. 8 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சகோதரி மகன் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலர் ராமகிருஷ்ணன் மற்றும்பாஜகவைச் சேர்ந்த ராகேஷ், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கே.டி.ராஜேந்திரபாலாஜி மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவருடன் கைதான ராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.