தூத்துக்குடி அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் மயக்கமடைந்த 54 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகே `நிலா சீ புட்ஸ்’ என்ற தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வாங்கி வரப்பட்டு, இந்த ஆலையில் பதப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர் கள் குறிப்பாக பெண்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர்.
அமோனியா வாயு கசிவு
மீன்கள் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்படுவதால் ஆலை முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. இதற்காக ஆலையில் அமோனியா வாயு அதிக அளவில் பயன்படுத் தப்படுகிறது. வழக்கம்போல் புதன் கிழமை இரவு பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டி ருந்தனர். இரவு 10 மணியளவில் திடீரென ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலை முழுவதும் வாயு பரவியதால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர் களுக்கு திடீரென மூச்சுத்திறணல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
54 பேர் பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ஆலைக்கு விரைந்து சென்று அமோனியா வாயு கசிவை சரி செய்தனர்.
வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 47 பெண்கள் உள்ளிட்ட 54 தொழிலாளர்கள், தூத்துக்குடியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒரு தொழிலாளி மட்டும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். மற்ற 53 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.உமா தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.