புதுச்சேரியில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பிறகு நாராயணசாமி மாநில அரசியலில் ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதை அவர் மறுத்தார். வருகிற புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவரது மகள் டாக்டர் விஜயகுமாரி (26), வரும் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக கட்சி தரப்பில் கூறியதாவது: தேர்தலில் இளையோருக்கு அதிக வாய்ப்பு தர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதால், தனது மகள் டாக்டர் விஜயகுமாரியை அங்கு போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு பெங்களூரில் இருந்த விஜயகுமாரி, தற்போது புதுச்சேரி மகிளா காங்கிரஸ் போராட்டங்கள், நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்கிறார். அத்துடன் தேர்தலில் போட்டியிட விருப்பமனுவும் தாக்கல் செய்துள்ளார். மகளிருக்கு தேர்தலில் வாய்ப்பு தரவும் மனு தந்துள்ளார்” என்று தெரிவிக்கின்றனர்.