சென்னை: தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளுக்கு வரலாம் எனத் தமிழக அரசு நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது. இதுகுறித்துப் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்வுக் கட்டணம் குறித்த உத்தரவை அரசுத் தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ''பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை ஜனவரி 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், பார்வை மாற்றுத்திறனாளி, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இது தவிர, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.