சென்னை அண்ணா சாலையில் முதல்வர் நடத்திய திடீர் ஆய்வில் பொதுமக்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். 
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் பொது இடங்களில் திடீர் ஆய்வு: முகக்கவசம் அணியாதவர்களுக்கு வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் இன்று பொது இடங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

அண்ணா சாலையில் உள்ள ரிச் தெரு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒட்டியுள்ள பகுதிகளில் எல்லாம், பொதுமக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது சாலையின் ஓரம் நின்றிருந்த மக்கள் அவரை உற்சாகத்தோடு வணங்கினர். அவர்களின் அருகே சென்றவர் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அறிவுறுத்தி முகக்கவசம் வழங்கினார்.

சாலையில் சென்ற பொதுமக்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை அழைத்து முதல்வர் தன் கையில் வைத்திருந்த முகக்கவசங்களை அளித்தார். ''தயவுசெய்து முகக்கவசத்தோடு வெளியில் வாருங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்களுக்கு கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தயங்காமல் அபராதம் விதிக்க வேண்டும் என நேற்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT