புதுச்சேரி : புதுச்சேரி கதிர்காமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி முகாமினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்து 97 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார் அதன்படி நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் இன்று முதல் துவங்கியது.
இதனிடையே, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு அதாவது, 2007அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதற்காக மத்திய அரசின் சுகாதாரத் துறையி லிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு பெறப்பட்டு உள்ளது. இவை குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் குறித்து சுகாதாரத்துறையினர் தரப்பில் கூறுகையில்,
"புதுச்சேரியில் 15 முதல் 18 வயதினர் சுமார் 83 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவர்களாக உள்ளனர். முதலில் பள்ளிகளுக்கும், தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசிகளை செலுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளிலேயே மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதியப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இப்பணியில் 1,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பள்ளி, கல்லூரிகள் மட்டுமில்லாமல் ஏற்கெனவே தடுப்பூசி போடப்படும் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படும் இதற்காக முன்பதிவை ஆன்லைன் அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் பதிவு செய்யலாம். ஏற்கெனவே உள்ள கோவின் செயலி கணக்கு மூலம் சுயப்பதிவு செய்யலாம். தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கியும் பதிவு செய்யலாம். நேரடியாக தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள சரிபார்ப்பவர், தடுப்பூசி போடுபவர் மூலம் ஆன்சைட்டிலும் பதிவு செய்யலாம்." என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.