வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
நாடே போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில் நிலம் மீட்பு, தமிழ்த்தாய் வாழ்த்து என திமுகவின் சாதனை பட்டியல் தொடர்கிறது.
7 தமிழர்கள் விடுதலையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் பாதகமான செயலை மத்திய அரசு செய்கிறது. எனவே,தமிழகம் வரும் பிரதமர் மோடிக்குஎதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
குஜராத் மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் துடிக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மவுனமாக இருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவானஅணியை கட்டமைக்க வேண்டும்.
ஆளுநர் அதிகாரத்தை மறுவரையறை செய்ய வேண்டும். துணைவேந்தர் உள்ளிட்ட நியமனங்களை ஆளுநர் அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும். 27 ஆண்டுமதிமுக வரலாற்றில், நான் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்ததுகூட இல்லை. இவ்வாறு அவர்கூறினார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உடன் இருந்தார்.