திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.98.79 லட்சம் கிடைத்துள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகன் கோயில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு, திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பணம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். மாதத்துக்கு ஒருமுறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் எண்ணப்படும்.
இந்நிலையில், வரும் 31-ம் தேதிபடி பூஜை மற்றும் ஜன.1-ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, உண்டியல்களை முன்கூட்டியே திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், கடந்த, 15 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில், கோயில் ஊழியர்கள் எண்ணினர்.
இதில், 98.78 லட்சம் பணம், 650 கிராம் தங்கம், 7.525 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.