தமிழகம்

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் கடமை தவறும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை செய்து வரும் ஏஹெச்எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அங்குள்ள கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது.

அதை எதிர்த்து இரு நிறுவனங்களும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் அதை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தி, கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன், அவர்களின் ஐஏஎஸ் பதவியையும் பறிக்க வேண்டும். அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவதே முதல்கட்டமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்த மனுதாரர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ள நீதிபதிகள், அந்த தொகையை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், திருவேற்காடு அக்ரஹாரத்தில் உள்ள பசு மடம் என்ற அமைப்புக்கும் வழங்க வேண்டும், என உத்தரவி்ட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT