தமிழகம்

50 ஆயிரம் இடங்களில் நாளை 16-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (ஞாயிறு) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “மெகா கரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை (இன்று) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும். அதன்பின்னர் வழக்கம்போல், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT