கொடைக்கானல்: கொடைக்கானலில் உறை பனி சீசன் தொடங்கியது. புற்கள் மீது பனித் துளிகள் வெண்மையாகப் படிந்து காணப்படுகிறது. இரவில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது.
கொடைக்கானலில் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மலைப் பகுதி முழுவதும் பசுமையாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களாகக் குளிர் அதிகரித்து உறை பனி சீசன் தொடங்கி உள்ளது. டிசம்பர் 15-ம் தேதிக்கு மேல் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இரவு 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. நேற்று இரவு 8 டிகிரி செல்சியஸாகக் குறைந்து கடும் குளிர் நிலவியது.
இதனால் ஏரிச்சாலை, ஜிம்கானா, கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள புற்களில் பனித் துளிகள் படிந்து வெண்மையாகக் காட்சி அளித்தது.
கடும் குளிர் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. உறை பனி காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு அதிகம் வருவர். தற்போது கரோனா கட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றனர்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும் கடும் குளிரை தாங்க முடியாமல் ஒரு நாள் சுற்றுலாவாக முடித்துக் கொண்டு இரவு திரும்பி விடுகின்றனர். அதிகாலையில் சூரியன் வெளிப்படத் தொடங்கியதும் ஏரி நீரில் இருந்து பனித் துளிகள் ஆவியாகச் செல்லும் காட்சி ரம்மியாக உள்ளது.
ஜனவரி மாத ஆரம்பத்தில் இரவு வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. கொடைக்கானலில் பிப்ரவரி மாதம் வரை குளிர் நிலவும். இதையடுத்து படிப்படியாக குளிர் குறைந்து இதமான கோடை சீசன் தொடங்கும்.