சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளின் தகவல் குறித்த மின்னணு பலகையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். மருத்துவமனை டீன் சாந்திமலர், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை மூலம், இங்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள், சிகிச்சைகள் வழங் கப்படுகின்றன. எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கின்றனர், இந்த மருத்துவமனையின் சாதனைகள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படும். இதேபோல், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி அமைக் கப்படும்.
3 ஆயிரம் பேருக்கு..
தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, அதிக ஆபத்தான நாடுகள், குறைந்த ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் தொற்று அறிகுறி) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 82 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் மட்டும் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.
இதுவரை 13 பேரின் முடிவுகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பும், 4 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரவுள்ளது.
669 பேருக்கு டெங்கு
தமிழகத்தில் 1 லட்சத்து 61,667 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 669 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை டெங்குவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரின் மாதிரிகளும் பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.