தமிழகம்

அமைதியை சீர்குலைக்கும் இலங்கை கடற்படைக்கு கண்டனம்: இரா. முத்தரசன்

செய்திப்பிரிவு

அமைதியை சீர்குலைக்கும் இலங்கை கடற்படைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து 18.12.2021ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை அரசின் கடற்கடை தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு தமிழ்நாட்டின் மீனவர் வாழ்வுரிமையை பறித்து வருவது இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் அமைதிநிலைக்கு பெரும் குந்தகம் ஏற்படுத்துகிறது.

இலங்கை கடற்படையின் அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து மத்தியஅரசின் வெளியுறவுத்துறை உறுதியான நடவடிக்கை எடுத்து - இலங்கை கடற்படையின் அத்துமீறலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களை கைது செய்யும்போது படகுகளை பறிமுதல் செய்வதுடன், அதனை உடைத்தும், மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து சேதப்படுத்துவதுமான அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இலங்கை அரசின் எல்லை மீறிய செயலைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

மீனவர்களின் உணர்வை பிரதிபலித்து தமிழ்நாடு முதலமைச்சர், அயலுறவுத்துறை அமைச்சருடன் பேசியிருப்பது நிலவரத்தின் தீவிரத்தை காட்டுகிறது. ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமை காக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT