தமிழக மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்துச் சென்றனர். மேலும் அவர்களது 6 விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.