தமிழகம்

கேப்டன் வருண் சிங் மறைவு: சோகத்தில் மூழ்கிய நஞ்சப்ப சத்திரம் மக்கள்

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது நஞ்சப்ப சத்திரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குன்னூர் மகளிர் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

14 பேரும் உயிரிழந்தனர்:

ஹெலிகாப்டரில் பயணித்து உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங் சிகிச்சை பெற்று வந்தார். 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் வெலிங்டனில் ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

வருண் சிங்குக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளது நீலகிரி மாவட்ட மக்களைக் குறிப்பாக நஞ்சப்ப சத்திரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட விபத்தின்போது உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங், ஒரு வார காலத்துக்குப் பின்னர் அதே புதன்கிழமையான இன்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரை உயிருடன் மீட்க உதவிய மூர்த்தி கூறும்போது, ''வருண் சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளித்து அவரை உயிருடன் மீட்டு விடுவார்கள் என நம்பியிருந்தோம். அவர் குணமடைந்ததும் அவரைக் காண விரும்பினேன். ஆனால், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது என்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

அவரது பிரிவு என்னையும், நஞ்சப்ப சத்திரம் மக்களையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது'' என்றார்.

அஞ்சலி:

பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள், வருண் சிங் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT