குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியானார்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு போய் ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து மீட்பு பணியும் மேற்கொண்டனர்.
தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர். தன்னலம் பாராமல் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரம் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த ராணுவத்தினர் இதயங்களிலும் இடம் பிடித்து விட்டனர்.
இந்த கிராமத்தினருக்கு விமானப்படை, ராணுவம், போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ.2.5 கோடி ஒதுக்கீடு:
இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீர், சாலை மற்றும் அடிப்படை வசதிகள் தேவை என கோரரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தெரிவித்தார்.
இன்று, அவர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் இன்று ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “ குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கோரிக்கையான தடுப்பு சுவர், தண்ணீர் வசதி, நடைபாதை வசதி செய்து தரப்படும். இதற்கான ஆய்வு செய்தேன். குன்னூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள், பணிகளுக்கான அளவீடு செய்துள்ளனர்.
விரைவில் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நினைவு சின்னம் அமைக்கவும், காட்டேரி பூங்காவை உயிரிழந்த முப்படைகளின் தளபதி பெயரில் பெயர் மாற்றவும் தமிழக அரசுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
போலீஸார் தொடர்ந்து விசாரணை:
ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தொடர்ந்து 6-ஆம் நாளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதால், கிராமத்தினரை தவிர யாரையும் ஊருக்கு ராணுவத்தினர் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், 6-ஆம் நாளாக இன்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் மழை பெய்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மற்றும் 10க்கும் மேற்பட்ட நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.