தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவம் நன்றி

ஆர்.டி.சிவசங்கர்

விபத்து ஏற்பட்டதும் துரித கதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், மக்கள், தன்னார்வலர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் கலந்துகொண்டு, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர் பேசும்போது, "துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் அப்பகுதி மக்களும், மாவட்ட நிர்வாகமும் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மீட்புப் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைத்தனர். மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஆர்.சி ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்" என்று லெப்.ஜெனரல் அருண் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT