பாரதியார் பிறந்தநாள் மற்றும்சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை போட்டியை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகைவெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆளுநரின் விருப்பத்துக்கு இணங்க ஆளுநர் மாளிகை சார்பில், மகாகவி பாரதியாரின் 139-வதுபிறந்தநாள் மற்றும் நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரை போட்டி (தமிழ், ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகதலைவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: ‘இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு’ (Contributions of Mahakavi Bharathiar to Independence of India). கட்டுரைகள் 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ் கட்டுரைகளை mahakavibharatisch2021tamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், ஆங்கில கட்டுரைகளை mahakavibharatisch2021eng@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும்.
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: ‘பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்’ (India in the Imagination ofMahakavi Bharathiar). கட்டுரைகள் 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
தமிழ் கட்டுரைகளை mahakavibharaticol2021tamil@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கும், ஆங்கிலகட்டுரைகளை mahakavibharaticol2021eng@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல்மூலம் அனுப்புவதற்கான கடைசிநாள் ஜன.8-ம் தேதி மாலை 5 மணி. தங்கள் பெயர், முகவரி, கல்வி நிறுவன முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையிலான குழுவினர் சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா ஒருவர்வீதம் 4 பேர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளி மாணவர் பிரிவில் ரூ.1 லட்சம், கல்லூரி மாணவர் பிரிவில் ரூ.2 லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் ஆளுநர் மாளிகையில் வரும் ஜன.26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.