சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் நேற்று இரவு திருச்சி வந்த மற்றொரு பயணிக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவிவிடாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டாய கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்படுபவர்கள் மட்டுமே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து டிச.5-ம் தேதி இரவு திருச்சி வந்த 63 வயதான மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆணுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய, சளி மாதிரி எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து டிச.2-ம் தேதி திருச்சி வந்த 56 வயதான தஞ்சாவூரைச் சேர்ந்த ஆணுக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.