முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்ட நீர்கோழியேந்தல் கிராம மக்கள். 
தமிழகம்

போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்: முதுகுளத்தூரில் கிராம மக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் மாணவர் இறந்தார் எனக்கூறி, மக்கள் மறியல் செய்தனர்.

முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த லட்சுமணக்குமார் மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர். காவல்நிலையத்துக்கு அவரை அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் தாயாரை வரவழைத்து மணிகண்டனை அனுப்பிவைத்தனர். வீட்டில் நள்ளிரவில் மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மணி கண்டனின் உறவினர்கள், கிராமத் தினர் போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

SCROLL FOR NEXT