தமிழகம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையின் தொடர் தாக்குதல் கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தொடர் தாக்குதல் கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீது இலங்கை படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசித் தாக்கியுள்ளனர். இலங்கை படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் முதல் இராமேஸ்வரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT