குற்றவாளிகளை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதும், புதுச்சேரியில் ரவுடிகளை பிடிக்க செல்லும்போதும் ரோந்து செல்லும்போதும் போலீஸார் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி எடுத்து செல்லலாம் என்று புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடித்து அவர்களிடமிருந்து 36 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக லாஸ்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கு சிறப்பு குற்றபிரிவு குழு ஒன்றை அமைத்தார்.
இந்த குழுவினர் கடந்த ஓராண்டாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து மதுரையை சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பல் இதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுரை ரத்தினபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30), ராம்கி என்ற கந்தசாமி (33), சிவகங்கைஆனந்தராஜ் (எ) தக்கி பெருமாள் (24), மதுரை டிவிஎஸ் நகர் செந்தில்(30) ஆகிய நால்வரை அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல பகுதிகளில் கொலை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இவர்களிடமிருந்து 36 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் இன்று கூறுகையில், "நகரெங்கும் சிசிடிவி பொருத்தும் பணி நடந்துவருகிறது. மதுரை கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் தந்த ரவுடியையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரெட்டியார்பாளையம் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோர் விரைவில் கைதாவார்கள்.
குற்றவாளிகளை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதும், புதுச்சேரியில் ரவுடிகளை பிடிக்க செல்லும்போதும் ரோந்து செல்லும்போதும் போலீசார் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.