கோப்புப் படம் 
தமிழகம்

திமுகவில் சேர மிரட்டல்: அதிமுக ஒன்றிய செயலர் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை

கி.மகாராஜன்

திமுகவில் சேர தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக ஒன்றிய செயலர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

கரூர் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மதுசூதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அதில், தான் கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலராக உள்ளேன். என்னையும். கரூர் மாவட்ட அதிமுகவினரை திமுவில் சேருமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டாயப்படுத்தி வருகிறார். அவரது அழைப்பை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுகின்றனர். போலீஸாரும் திமுகவினரின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக உள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் திமுகவில் இணையுமாறு என்னை போலீஸாரை வைத்து கட்டாயப்படுத்தினர். திமுகவில் சேர மறுத்தால் என் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினர்.

இந்நிலையில் நவ.15-ல் போலீஸார் என் வீட்டிற்கு வந்து ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு என்னை அழைத்தனர். முறையாக காரணம் தெரிவிக்காததால் விசாரணைக்கு செல்ல மறுத்துவிட்டேன். இதனால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்வதற்கு வாய்ப்புள்ளதாக அச்சம் உள்ளது. எனவே, என்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டுகளுடன் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT