பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் சிறை மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொரு பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தென்காசி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தாக சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ராம்குமாரின் தந்தை பரமசிவம் புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் 23-ம் தேதி நடந்த விசாரணையின்போது, ராம்குமாரை பரிசோதித்த சிறைத்துறை மருத்துவர் நவீன் குமார், பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம், அப்போதைய சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், சிறை காவலர் ஜெயராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மனித உரிமை ஆணைய விசாரணையை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கோரியும் சிறை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தபோது, அங்கிருந்த மின்சார சுவிட் பாக்சை, உடைத்து ஒயரை பிடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ராம்குமாரின் உடல் எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனை அறிக்கையில் ராம்குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதுள்ளார்.
ராம்குமார் மரணம் நடந்து ஒரு வருடத்திற்குள் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர முடியும். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. ராம்குமார் தந்தையின் தரப்பிலும் தவறான கருத்துக்கள் ஊடகங்களில் பரப்பபடுகிறது. எனவே மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சிவஞானம் அடங்கிய அமர்வு, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு குறித்து மனித உரிமை ஆணைய பதிவாளர், ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.