தமிழகம்

ஆயுள் தண்டனை ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி, 1998 மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொறியாளர் வீரபாரதி (50), முருகன், உபயதுல்லா ஆகியோரை அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 3 பேருக்கும் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பின்னர் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களில் உபதுல்லா இறந்து விட்டார். வீரபாரதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தன்னை முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி அரசிடம் மனு அளித்தார். அந்த மனுவை நிராகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வீரபாரதி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் வீரபாரதி வழக்கறிஞர் வைக்காமல் தானே வாதிடுவதாக தெரிவித்தார். இதற்காக அவருக்கு பரோல் விடுமுறை வழங்கப்பட்டது. அவர் இரண்டரை ஆண்டுகள் பரோலில் இருந்தார்.

இந்நிலையில், வீரபாரதியின் பரோல் விடுமுறையை ரத்து செய்து, அவரை சிறையில் அடைக்க சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் வீரபாரதி வழக்கில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை ஒரு உரிமையாக கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே கூறியுள்ளது. இதனால் மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT