வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
“திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது இது மாலை தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியை நெருங்கக்கூடும்.
வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் . நாளை கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை தொடரும். மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்”.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.