பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காகப் பொது வெளியில் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. யாராக இருந்தாலும் எப்படிப் பேச வேண்டும் என வரைமுறை உள்ளது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், ''மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதாக என் மீது புதுக்கோட்டை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கோரினார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”மனுதாரரின் சகோதரரும் தமிழக அரசையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. மனுதாரரும் அவதூறாகப் பேசி வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.
இதையடுத்து, ''பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காகப் பொதுவெளியில் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. யாராக இருந்தாலும் எப்படிப் பேச வேண்டும் என வரைமுறை உள்ளது. மனுதாரர் இனிமேல் அவதூறாகப் பேசமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்" என்று கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.