கோப்புப் படம் 
தமிழகம்

ஆதிதிராவிடர், பழங்குடியினத் தொழில் முனைவோருக்கு மேலாண்மைப் பயிற்சி: ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி செலவினத்தில், தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவு ஏற்படுத்தித் தரும் வகையில் கடன் பெற 5000 தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மாவட்ட அளவில் 7 நாள் தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் தகுதியான நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் செயல்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 4500 தொழில் முனைவோர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 500 தொழில் முனைவோர் உள்ளிட்ட 5000 தொழில் முனைவோரைத் தெரிவு செய்து, ஒரு தொழில் முனைவோருக்கு, ரூ.4000/- வீதம் (பயிற்சி நிறுவனத்திற்கு ரூ.3400/- மற்றும் தொழில் முனைவோருக்கு உதவித்தொகை ரூ. 500/), 5000 தொழில் முனைவோருக்கு, ரூ.2. கோடி செலவினத்தில், மாவட்ட அளவில் தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT