சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (34). ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்தார். இவரது மனைவி நந்தினி (31). இவரும் மருத்துவராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது காரில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓர் ஓட்டலுக்கு மகேஷ்வரன் சென்றுள்ளார். காரை ஓட்டுநர் கார்த்திக் ஓட்டிச் சென்றுள்ளார். ஓட்டலில் ஓர் அறையில் தங்கியுள்ளார். பின்னர் கார் ஓட்டுநர் கார்த்திக் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
மகேஷ்வரனுடன் பணிபுரியும் வினோத் என்ற மருத்துவர், கார்த்திக்கிடம் மகேஷ்வரன் பற்றி விசாரித்துள்ளார். அவர் ஓட்டல் அறையில் இருக்கும் விவரத்தை கார்த்திக் கூற, வினோத் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அறையின் கதவைத் தட்டியும் திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் மாற்று சாவி மூலம் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அறையில் படுக்கையில் படுத்த நிலையில் மகேஷ்வரன் இறந்து கிடந்துள்ளார்.
அவரது இடது கையில் ஊசி குத்தப்பட்டிருந்த நிலையில், குளுக்கோஸ் பாட்டில் மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டிருந்தன. அவருக்கு அருகில் ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் கிடந்துள்ளன. தகவலின்பேரில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அதிக டோஸ் மருந்துகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அறையில் ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, யாரையும் துன்புறுத்த வேண்டாம்’ என மகேஷ்வரன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.