தமிழகம்

இரு மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், “தெற்கு வங்கக் கடல் பகுதியில் (4.5 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்தத் தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து வரும்‌ நாட்களில்‌ தமிழக கரையை நோக்கி நகரக்‌கூடும்‌.

இதன்‌ காரணமாக இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர்‌, விழுப்புரம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌ பெய்யும். ஏனைய தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யும்.

ஏனைய வட கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT