லஞ்ச வழக்கில் முன்னாள் மக்கள் நலப்பணியாளருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள கள்ளையை சேர்ந்தவர் துரை. இவர் கடந்த 2010ம் ஆண்டு நிலம் தொடர்பாக புகார் அளிக்க தோகைமலை காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சிவாயம் பகுதி மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்து புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் அளிக்க விரும்பாத துரை இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனை படி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்து ஆகியோரிடம் ரூ.7,000 லஞ்சம் வழங்கியப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நடந்த வந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கடந்த 2013ம் உயிரிழந்த நிலையில் இவ்வழக்கில் தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் இன்று (நவ. 23ம் தேதி) அளித்த தீர்ப்பில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உயிரிழந்த நிலையில் இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.
முன்னாள் மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்துவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.