வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் சம்பவம் நடந்த இடத்தைக் காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வராஜ். 
தமிழகம்

கரூரில் வாகன சோதனையின்போது நிற்காத வேன்: அதிவேகமாக மோதியதில் வாகன ஆய்வாளர் பலி

செய்திப்பிரிவு

கரூர் அருகே வாகன சோதனையின்போது நிற்காமல் அதிவேகமாகச் சென்ற வேன் மோதியதில், மோட்டார் வாகன ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (57). இவர் நவ.22 இன்று காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த முயன்றபோது வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காலை 10.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ்

மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேனைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT