தமிழகம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு வீர வணக்கம்: வைகோ

செய்திப்பிரிவு

திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு மதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது.நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின்தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது.அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.

குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல்துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பூமிநாதனுக்கு வீர வணக்கம்.அவரை இழந்து வேதனையில் உழலும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT