தமிழகம்

கரூர் மாணவி தற்கொலை; குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்: அன்புமணி

செய்திப்பிரிவு

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

“கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெண்ணெய்மலை மாணவியைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைவாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். கோவை, கரூர், திண்டுக்கல், சென்னை எனக் கல்விக்கூடங்களில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன செய்தாலும் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான். இதை மாற்ற வேண்டும்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதி வழங்குவதில்தான் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT