மதுரை ஜெய்ஹிந்த்புரம் அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படமும் இடம்பெற்றுள்ள புதிய பெயர் பலகை. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

அம்மா உணவக பெயர் பலகையில் கருணாநிதி படம்: மதுரையில் புதிய சர்ச்சை

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி அம்மா உணவகம் பெயர் பலகையில் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படமும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகம் பெயர்பலகையை திடீரென மாற்றிவிட்டு, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி படங்களை வைத்து புதிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதனைப் பார்த்த அதிமுகவினர், இந்த பெயர்ப்பலகையை உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் நேற்று மாலை வரை ஜெயலலிதா, கருணாநிதி படங்கள் இருந்த புதிய பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை. கருணாநிதி படம் வைக்கப்பட்டிருப்பதால் அரசு ஒப்புதல் இல்லாமல் அதனை அகற்றுவதற்கு மாநகராட்சி தயங்குவதாக கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அலைபேசியை எடுக்கவில்லை.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்படும் அம்மா உணவக பெயர்ப்பலகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படமும் இடம்பெற்றுள்ள தகவல் எங்களுக்கு தெரியாது. சமூக வலைதளங்களில் தகவல் பரவிய பிறகே தெரியவந்தது. படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவிடம் கேட்டபோது, ‘‘கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளோம், அவர்கள் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

SCROLL FOR NEXT