வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை கூறும்போது, "பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேவேளையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன் கூறும்போது, "வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஓராண்டு காலப் போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டத்தைத் தொடக்கத்திலேயே அரசு திரும்பப் பெற்றிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் நேரிட்டிருக்காது. விவசாயிகள், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்காது.
இருப்பினும், அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதேவேளையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான புதிய மின் திருத்தச் சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.