தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்த அண்ணன், தம்பி உள்ளிட்ட நான்கு பேரைத் தஞ்சாவூர் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 74 பவுன் நகைகள் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின்படி, தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவேல் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகு சுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (17-ம் தேதி) தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுக் கொள்ளையடிக்கும் கும்பல் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சோதனையிட்டபோது அவர்களிடம் 74 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப் பணமும், வீடுகளின் பூட்டை உடைக்கப் பயன்படுத்தும் இரும்புக் கம்பிகளும் இருந்ததை அடுத்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மனோஜ் (35), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த திலீப் திவாகர் (26), சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த ராஜாராமன் (26), இவரது தம்பி கார்த்திக் ராஜா (24) என்பதும் இவர்கள் தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
அதேபோல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்குட்பட்ட ஒரு வீட்டில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை இந்த கும்பல் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த கும்பலைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''சின்ன சின்ன திருட்டு வழக்குகளில் கோவை சிறையில் இந்த நான்கு பேரும் சந்தித்துள்ளனர். அதன்பிறகு வெளியே வந்த இந்த நான்கு பேரும் மனோஜ் தலைமையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுக் கொள்ளையடித்து வந்துள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேவகோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது.
இதில் கடந்த 12-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ஒரு வீட்டில் 42 பவுன் நகையைக் கொள்ளையடித்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பவுன் நகையையும், தஞ்சாவூரில் 15 பவுன் நகையையும் கொள்ளையடித்துள்ளனர். இந்த நகைகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்களைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், தஞ்சாவூரில் இவர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குகள் உள்ள அந்தந்த மாவட்டக் காவல்துறையினர் இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 500 பவுனுக்குக் குறையாமல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மீண்டும் தஞ்சாவூரில் புறநகர்ப் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்'' என்று போலீஸார் தெரிவித்தனர்.