நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களின் மனுக்களைப் பெற கட்சி நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களிடம் விருப்ப மனுக்களைப் பெறுவதற்கு தலைமைக் கழகப் பிரதிநிதிகள் கீழ்க்காணும் முறைப்படி நவம்பர் 29-க்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்ப மனுக்களைத் தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேட்புமனுக் கட்டணமாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.1,000/-ம், நகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.500/-ம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.250/-ம் செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே வாழ்நாள் உறுப்பினராகவும், சங்கொலி சந்தாதாரராகவும் இல்லாதவர்கள் விருப்பு மனுவுடன் ‘வாழ்நாள் உறுப்பினர்’ கட்டணமான ரூ.500 மற்றும் ‘சங்கொலி’ ஏட்டிற்கு ஆண்டு சந்தா ரூ 550-ஐச் செலுத்த வேண்டும்.
விருப்ப மனு பெறும் தேதியும், இடமும் உரிய மாவட்டச் செயலாளர்கள் தெரிவிப்பார்கள்.
இதன்படி, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, தென்சென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு கிழக்கு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் மனுக்களைக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பெறுவார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய பகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் மனுக்களை அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் பெறுவார்.
விழுப்புரம், வடக்கு விழுப்புரம், தெற்கு (கள்ளக்குறிச்சி), கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி பெறுவார்.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா விருப்பம் உள்ளவர்களின் மனுக்களைப் பெறுவார்.
இதேபோல் மதுரை மாநகர், மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் மனுக்களைச் சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் பெறுவார்.
ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விருப்ப மனுக்களைக் கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் பெறுவார்.
கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி உள்ளிட்ட பகுதியில் கழகத் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி இரா.அந்திரிதாஸ் விருப்ப மனுக்களைப் பெறுவார்.
விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, நெல்லை மத்திய மாவட்டம், நெல்லை புறநகர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் விருப்ப மனுக்களைப் பெறுவார்.
சேலம் மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுக தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் விருப்ப மனுக்களைப் பெறுவார்”.
இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.