தமிழ் கட்டாயப் பாட சட்டத்தை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகத்தில் மாநிலக் கல்வித் திட்டங்களைக் கடைபிடிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 2015-16 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஒரு கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுத் தருவதற்கே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
ஆங்கில வழியில் கற்றுத் தரும் பதின்நிலைப் (மெட்ரிக்) பள்ளிகள் காளான்களைப் போல பெருகிய பிறகு தான், தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெற்றுவிட முடியும் என்ற அவல நிலை ஏற்பட்டது.
அனைத்துப் பள்ளிகளில் ஆங்கிலமும், பெரும்பாலான பள்ளிகளில் இந்தியும் கட்டாயப் பாடமாக இருக்கும் நிலையில், தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது சிறுபான்மை பள்ளிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்று தனியார் பள்ளிகள் தரப்பில் முன்வைக்கப் படும் வாதத்தை ஏற்க முடியாது. இச்சட்டத்தை எதிர்த்து மலையாள சமாஜம், கன்னியாகுமரி மாவட்ட நாயர் சேவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 18.02.2008 அன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம்,‘‘ அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ என கண்டனம் தெரிவித்தது.
இதற்கெல்லாம் மேலாக ஒரு மாநிலத்தின் மொழியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும், செழுமைப் படுத்த வேண்டிய கடமையும் அந்த மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழை கட்டாயப் பாடமாக்கி கற்பிப்பதால் கல்வித் தரம் எந்த வகையிலும் குறையாது. மாறாக திருக்குறள் கற்றுத்தரும் அறம் மற்றும் பொருளும், ஆத்திச்சூடி கற்பிக்கும் நன்னெறியும், புறநானூறு பயிற்றுவிக்கும் வீரமும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ வழி செய்யும்.
எனவே, தமிழை புறந்தள்ளி விட்டு, ஆங்கில வழிக் கல்வியையும், அயல்மொழிப் பாடங்களையும் கற்றுத் தருவது தான் உயர்வான கல்வி என்ற மாயையை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புவதை விடுத்து, அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்றுத் தர தனியார் பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதன் அடையாளமாக தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்.