இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள். 
தமிழகம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்கள் விடுதலை: படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு

எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை நிபந்தனையுடன் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை அரசுடைமையாக்க உத்தரவிட்டது.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சிவனேசன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் 11-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் அனைவரும் மீனவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 15-ம் தேதி கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள்சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 23 மீனவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்படுகிறது என்று பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புவர் என தெரிகிறது.

SCROLL FOR NEXT