கோவையில் பன்றிக்காய்ச்சல் (ஹெச்1என்1) பாதிப்பு ஏற்பட்ட பெண்களின் குடும்பத்தினர், அருகில் வசிப்போர் உள்ளிட்ட 13 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்,ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63வயது பெண் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புஅதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றொருவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மாதிரிகள் சேகரிப்பு
இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரையும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், அவசியம் என்றால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொது வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தியுள்ளோம். அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய இரு வைரஸ் பரவலுக்கும் ஒரே மாதிரியான தடுப்பு பணிகள், பரிசோதனை முறைகளே பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சளி, இருமல், தொண்டைவலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்துமாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.