புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்து காவலரை தாக்க முற்பட்டதாக திமுக நிர்வாகி உட்பட இருவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக புளியந்தோப்பில் கடந்த 7 நாட்களாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஸ்ட்ரஹான்ஸ் சாலை பேரக்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸார் தடுப்புகள் அமைத்து, மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அத்துமீறி தடுப்புகளை அகற்றிவிட்டு செல்ல முற்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் உமா மகேஷ்வரி மாற்று பாதையை பயன்படுத்துமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலரை இருவரும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவரும் பெண் காவலரை தாக்க முயற்சி செய்தனர்.
பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.
பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் பட்டாளம் கார்ப்பரேசன் லேன், கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் என்பதும், திமுக பகுதி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது. அவருடன் வந்த மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த வினேஷ்பாபு(45) என்பதும் தெரியவந்துள்ளது.