ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தக் கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அண்ணா பேருந்து நிலையம், பூங்கா முருகன் கோயில், தமுக்கம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்குத் தள்ளிவைத்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. எனினும் நேரடித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.