தமிழகம்

சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பெண் எஸ்பி 6 மணி நேரம் சாட்சியம்: விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்றும் விசாரணை தொடர்கிறது

செய்திப்பிரிவு

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் 6 மணி நேரமாக பெண் எஸ்பி சாட்சியம் அளித்தார்.

தமிழக காவல்துறையில் சிறப்புடிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசா ரணை முடிந்து முன்னாள் சிறப்புடிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பிஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடிபோலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரம் மாவட்டதலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும், புகார் தெரிவித்திருந்த பெண் எஸ்பியும் நேரில் ஆஜரானார்.

இதனையடுத்து நீதிமன்ற அறை கதவுகள் மூடப்பட்டு பெண் எஸ்பியிடம் நடுவர் கோபிநாதன் விசாரணை நடத்தினார். அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து பெண் எஸ்பி சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடுவரிடம் சாட்சியம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை (இன்று)ஒத்தி வைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார். நாளையும் (இன் றும்) முன்னாள் சிறப்பு டிஜிபி, முன் னாள் செங்கல்பட்டு எஸ்பி மற்றும் பெண் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகவும் நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

இன்று மீண்டும் பெண் எஸ்.பியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT