தமிழகம்

அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம்: கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கனமழை தொடர்வதால் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் ட்விட்டரில், "தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்.

குறிப்பாக செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை / கனமழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT