தமிழகம்

கனமழை: 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துத் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டஅறிவிப்பு:

''தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நவ.8ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுக்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன.

ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களைத் தனித்தேர்வர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த நவம்பர் 8, 9-ம் தேதிகளில் நடைபெற இருந்த தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் மட்டும் கனமழையால் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT