நாளை மேட்டூர் அணையில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கையாக முக்கொம்பு மேலணை முன்கூட்டியே இன்று திறக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மேட்டூர் அணையில் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டும் நீரானது திருச்சி கொள்ளிடம் ஆற்றைச் சென்றடைகிறது.
இதனிடையே, நாளை மேட்டூர் அணையில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் என்பதால் திருச்சி கொள்ளிடம் முக்கொம்பு அணையில் பாதுகாப்பு கருதி இன்றே 10,000 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றினர்.
அணையின் 32 பழைய கதவணை மூலம் நீரை அதிகாரிகள் பொறுமையாகத் திறந்துவிட்டனர். இதனிடையே, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கவும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே கனமழை காரணமாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வாய்க்காலை ஒட்டியுள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.